பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு அஞ்சல் அட்டை மூலம் புகார் அளிக்கும் திட்டம் : அடையாறு துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்

துரைப்பாக்கம் :பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாமல் அஞ்சல் அட்டை மூலம் புகார் அளிக்கும் திட்டத்தினை அடையாறு துணை கமிஷனர் கானத்தூரில் நேற்று தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும்,  பெண் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை பெற்றோர்களிடம் தெரிவிக்க தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில்கொண்டு சென்னை காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ளவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாதுகாப்பை உறுதி  செய்யவும் அனைத்து மகளிர் காவல் நிலைய புகார்கள் மீதான விசாரணைகளுக்கு சட்டம்-ஒழுங்கு காவல்துறை அதிகாரிகளும் உதவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து,  கமிஷனர் உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் கானத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு கரிகாட்டுகுப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நேற்று வழங்கினார். அப்போது, குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு  தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அஞ்சலட்டை மூலமாக அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பங்குபெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்கினார்.

Related Stories: