மடையை சீரமைக்காததால் கண்மாய் நீர் புகுந்து நெற்பயிர்கள் நாசம்

திருச்சுழி: திருச்சுழி அருகே மடையை சீரமைக்கபடாததால்  கண்மாய் நீர் வெளியேறியதால் பல ஏக்கரில் நெற்பயிர் நாசமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருச்சுழி அருகே கம்பாளி கிராமத்தில் சுமார் 150க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம பகுதியில் ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்க்கு முடுக்கன்குளம், கானல்ஓடை பகுதியிலிருந்து மழைநீர் பெருக்கெடுத்து வருடந்தோறும் முழு கொள்ளளவை வந்தடையும். இக்கண்மாயின் மூலம்  சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடையும்.  இந்த கண்மாயில் மூன்று மடைகள் உள்ளன.  தற்போது கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கண்மாயில் உள்ள நடுமடை சேதமடைந்ததால்  வருகின்ற மழைநீர் விரிசல் வழியாக வீணாகி வயல்வெளியாக  இடையான்குளம் கண்மாய் பகுதிக்கு வீணாக சென்றது.

தற்போது அதிகளவில் மடையில் விரிசல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக கண்மாய் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் கம்பாளி கிராமத்தினர் சுமார் 200க்கும் மணல் மூட்டைகளை அடுக்கி நீர் கசிவதை  தடுத்து நிறுத்தினர். கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்து பயிர்கள் முழுவதும் நாசமானதால் விவசாயிகள்  கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `` கடந்த மூன்று வருடங்களாக ஒன்றிய அலுவலகத்தில் நடுமடையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மடையை சீரமைக்க கோரி மனு கொடுத்து வருகிறோம். ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லாததால் கண்மாய் நீர் புகுந்து பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.

Related Stories: