கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 700 ஆடுகள் அடித்து செல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் 9 செ.மீ மழை பதிவானதால் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பாவலம் கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் பழனி, கருத்தாப்பிள்ளை, அஞ்சறை ஆகியோரது ஆடுகள் வெள்ளவாரி ஓடை அருகே உள்ள பட்டியில் கட்டப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கரை அருகேயுள்ள ஓடையில் நீர்வரத்து அதிகமானதால் ஏரிக்குள் நீர் புகுந்து வெள்ளவாரி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனால் ஓடையின் அருகே கட்டப்பட்டிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.