மூத்த தேர்தல் பார்வையாளர்களாக தமிழக காங்கிரசுக்கு 3 பேர் நியமனம்: அகில இந்திய தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மூத்த தேர்தல் பார்வையாளர்களாக 3 பேரை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் மற்றும் அகில இந்திய தலைவர்கள் பிரசாரத்தை ஒருங்கிணைக்கும் வகையிலும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 3 மூத்த தேர்தல் பார்வையாளர்களை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.  

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நடத்தப்படும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழகத்துக்கு மூத்த தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தேர்தல் பிரசார நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மூத்த தேர்தல் பார்வையாளர்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு எம்.வீரப்பமொய்லி, எம்.எம்.பல்லம் ராஜூ, நிதின் ராட் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: