பொங்கல் பரிசு பணத்தை தட்டி பறித்த வேளாண்துறை: விழுப்புரம் அருகே பரபரப்பு

திருக்கோவிலூர்: விழுப்புரம் அருகே பொங்கல் பரிசு தொகையை வேளாண் அதிகாரிகள் தட்டிப்பறித்தனர். இதை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லூர் கிராமத்தில் சுமார் 5ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள 826 குடும்ப அட்டைகளுக்கு அரசின் பொங்கல் பரிசு ரூ.2500 மற்றும் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த முகையூர் வேளாண்மை வட்டார விரிவாக்க மைய அலுவலர்கள் சிலர் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டைகளை வாங்கினர்.

பின்னர் அவர்களிடம் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களா என கேட்டு ரேஷன் அட்டைகளை பரிசோதித்து பொங்கல் பரிசு 2500 ரூபாயில் 1000 ரூபாயை கந்துவட்டிகாரர்கள் போல் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேளாண்மை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, உயர் அதிகாரிகள் எங்களுக்கு வாய்மொழி உத்தரவாக பொங்கல் பரிசுத்தொகையில் வசூல் செய்ய சொன்னதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: