சென்னை: சென்னையில் கடந்த 8 மணி நேரத்தில் 15.5 செ.மீ. மழையானது பதிவாகியிருக்கிறது. நேற்று நள்ளிரவு முதலே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. மழை பொழிவும் அதிகமாக இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பிரதான சாலைகளில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஜனவரி மாதத்தில் பெய்யும் மழையை காட்டிலும் தற்போது 4 நாட்களாக பெய்த மழையின் அளவு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.