சென்னை: தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக ரூ.3 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாக, காலமுறை சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு மாதம் 30 நாட்களுக்கு என்ற அடிப்படையில் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை தற்காலிக மிகை ஊதியமாக கணக்கிட்டு உச்சவரம்பினை ரூ.3 ஆயிரமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1000 வழங்க அரசு உத்தரவிடுகிறது.