தமிழக அரசு உத்தரவு சி, டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000

சென்னை: தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக ரூ.3 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாக, காலமுறை சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு மாதம் 30 நாட்களுக்கு என்ற அடிப்படையில் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை தற்காலிக மிகை ஊதியமாக கணக்கிட்டு உச்சவரம்பினை ரூ.3 ஆயிரமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1000 வழங்க அரசு உத்தரவிடுகிறது.

அதேபோன்று, சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட அனைவருக்கும் (1.10.2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவார்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையல்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், தூய்மைப் பணியாளர்கள், கிராம நூலகர்கள், தோட்டக்காவலர் உள்ளிட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.500 வழங்க அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என சுமார் 5 லட்சம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

Related Stories: