தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த அருண் நியமனம்

சென்னை: தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த லெப்டினென் ஜெனரல் அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழநாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களின் ராணுவ தலைமையகம் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தலைமை தளபதியாக பணியாற்றி வந்த பி.என்.ராவ் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து தென்பிராந்திய தலைமை தளபதியாக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதன் பிறகு தீவுத் திடல் எதிரே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த இவர், 1982ம் ஆண்டில் தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவ உத்திகள் மையம் மற்றும் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்றார். ராணுவத்தில் 35 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள அவர் ஜம்மு, காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் செயல்பட்டு வரும் ராஸ்டிரிய ரைபில்ஸ் பிரிவின் கமாண்டராகவும் செயல்பட்டுள்ளார். இவர் பணி காலத்தில் யுத் சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட சேனாபதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மேலும் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை தலைமையகம் மற்றும் ஜெனிவா ஆகிய இடங்களில் பல்வேறு திட்டங்களில்  பணியாற்றி உள்ளார். இவருடைய மனைவி ரூபா, பெங்களுருவில் உள்ள கேம்ப்ரிட்ஜ் சர்வதேச பள்ளியின் முதல்வராக உள்ளார்.

Related Stories: