எழுத்தாளர் இளவேனில் மறைவு: பாலகிருஷ்ணன் இரங்கல்

சென்னை: எழுத்தாளர் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் இளவேனில் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 1970களில் கலை மக்களுக்காக என்ற அடிப்படையில் இளவேனில் படைப்புகள் அமைந்தன. சிம்சன் தொழிலாளர்கள் வீறுகொண்டு போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டக் களத்திற்கே நேரில் சென்று வி.பி.சிந்தன் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தைப் பற்றிய கவிதையும், கட்டுரையும் எழுதியவர்.

இளவேனில், கார்க்கி, பிரகடனம் உள்ளிட்ட பத்திரிகைகள் மூலம் இடதுசாரி கருத்துக்களை வலிமையாக கொண்டு சென்றவர். தன்னுடைய வசீகரமான எழுத்துக்களின் மூலம் இளைஞர்கள் பலரை இயக்கத்திற்கு ஈர்த்தவர். அவருடைய இழப்பு எழுத்துலகத்திற்கும், குறிப்பாக, இடதுசாரி இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: