இன்ஜினியரை வெட்டிய ரவுடி பினுவின் மகன் கூட்டாளியுடன் கைது

புழல்: புழல் அடுத்த புதிய லட்சுமிபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(24). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விநாயகபுரத்தில் தனது நண்பர் சூர்யாவை பார்க்க டு வீலரில் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி பினு மகன் எபிமோன்( 23), பவன்குமார்(17), மணிவண்ணனை வழி மறித்து கத்தியால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து, தகவலறிந்த புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழாவில் எபிமோனுக்கும், மணிவண்ணனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதற்குப் பழி வாங்கவே மணிவண்ணனை தாக்கியது  தெரியவந்தது. இதனையடுத்து, எபிமோன்,பவன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: