சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் உடனடியாக திருப்பி தருவதில்லை என் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பதிவு செய்த அன்றைய தினமே ஆவணங்கள் திருப்பி தரப்படுகிறதா, இல்லையா என்று ஐஜி சங்கர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதனால், 90 சதவீதம் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தரப்படுகிறது. இருப்பினும், பல மாதங்களாக பல்வேறு காரணங்களால் நிலுவை ஆவணங்களாக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, களப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய ஆவணங்கள், மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய ஆவணங்கள் எனக்கூறி, நீண்ட நாட்களாக நிலுவையில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சார்பதிவாளர் அலுவலகங்களில் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்தாலும் அவற்றை அடைய முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக, பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இலக்கு நிர்ணயித்தாலும், குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கிறது.