சென்னை: சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிய 2,200 காவலர்களை தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக காவல் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் மற்றும் ஒரே பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை பணியிடமாற்றம் செய்வதற்கான பணிகள் தற்போது தமிழக காவல் துறையில் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவை தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் பணியில் பணியாற்றி வந்த 5004 காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து கடந்த டிசம்பர் 20ம் தேதி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.