70% பாடத்தில் கேள்வி: 10,12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும்...மத்தியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் 2021-ம் ஆண்டு மே 4-ம் தேதி முதல் தொடங்கும் என்று  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10-ம் வகுப்பு,12-ம்  வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதிக்குப்பின் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்  நடந்து வருகின்றன.

இதனால் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ தகவல் அளித்தது. மேலும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து  மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் பொக்ரியால் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும்,

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. எழுத்து முறையிலேயே தேர்வு நடத்தப்படும். 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்  நடத்தப்படும் என்றார். தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு 2021 பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

அதன்படி, இன்று மாலை 6 மணியளவில் 2021-ம் ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி  வரை நடைபெறும் என்றும் ஜூலை 15-க்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

70% பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும். மார்ச் 1, 2021 முதல் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ஆகியவற்றின் நடைமுறை / திட்டம் / உள் மதிப்பீட்டை நடத்த பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படும். 10  மற்றும் 12-ம் வகுப்பு இரண்டின் தேதி தாள் விரைவில் வழங்கப்படும என்றும் தெரிவித்தார்.

Related Stories: