கேரள சட்டப்பேரவையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்..!

திருவனந்தபுரம்: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில், பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.  

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற கேரளசட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை 23-ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை மறுத்துவிட்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் செயலுக்கு ஆளும் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

பின்னர் 2-வது முறையாக கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனை அடுத்த ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய பினராயி விஜயன் ‘‘புதிய வேளாண் சட்டங்களால் கேரளாவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உணவுப் பொருட்களுக்கு முழுக்க முழுக்க மற்ற மாநிலங்களையே கேரளா நம்பியுள்ளது. வேளாண் சட்டங்களால் உற்பத்தி மாநிலங்கள் பாதிக்கப்படும் போது அதன் மறைமுக பாதிப்பு கேரளாவிலும் இருக்கும்.’’ எனக் கூறினார். இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: