வேலூர்: வேலூரில் உள்ள மாநில வரித்துறை கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரது காஞ்சி, கிருஷ்ணகிரியில் உள்ள வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் மாநில வரித்துறையின் வேலூர் கோட்ட இணை ஆணையர் (செயலாக்கம்) அலுவலகம் உள்ளது. இணை ஆணையராக விமலா(42) உள்ளார். இவர் பொதுநிர்வாகம், நுண்ணறிவு பிரிவையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 1.50 லட்சம் பணம் மற்றும் சால்வைகள், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய ரெய்டு நள்ளிரவு 12 மணியளவில் நிறைவடைந்தது. இதையடுத்து இணை ஆணையர் விமலாவுக்கு சொந்தமான கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள வீடுகளிலும் நேற்று காலை முதல் அந்தந்த மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை போலீசார் மூலம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.