2025 க்குள் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்: டெல்லியில் பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: 2025 க்குள் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்ப ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி கூறினார். மெட்ரோ ரயில்  சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமான இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும். டெல்லி  மெட்ரோ ரயில்  நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ் பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டின் முதல் மெட்ரோ ரயில் வாஜ்பாயின்  முயற்சியால் தொடங்கப்பட்டது. 2014 ல் எங்கள் அரசு அமைந்த போது  ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன, இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025 க்குள் இதை நாங்கள்  25 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு  எடுத்துச் செல்வோம். 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் டெல்லி ஒரு பெரிய உலகளாவிய நிதி மற்றும் மூலோபாய சக்தியின் தலைநகராகும், இந்த மகிமை இங்கே பிரதிபலிக்க வேண்டும். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம், டெல்லி மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம் & நகரம் முன்னேறும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

Related Stories: