நாட்டிலேயே முதல்முறையாக டெல்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை...! கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக டெல்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைத் தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். டெல்லி, என்சிஆா் பகுதியில் பொதுப் போக்குவரத்தில் டெல்லி மெட்ரோ ரயில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. டெல்லி மெட்ரோ ரயில் சேவையை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவை துவங்கப்பட உள்ளது. ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையானது முற்றிலும் தானியங்கி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கையாக வெளியிட்டது. முதல்கட்டமாக டெல்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும். டெல்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டரில் இருந்து, ரயிலின் புறப்படும் நேரம், நிற்கும் நேரம், ரயிலின் வேகத்தை தீர்மானித்து இயக்கவுள்ளனர்.

கிழக்கு டெல்லியில் இருந்து மேற்கு டெல்லி வரை செல்லும் வழித்தடத்தில் இந்த தானியங்கி மெட்ரோ சேவைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 7ம் எண் வழித்தடத்தில் முதற்கட்டமாக இந்த சேவை துவங்கப்படும் என்றும், இதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்த பின் பிற வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் டெல்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வகை ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

Related Stories: