தஞ்சை மாணவன் கண்டுபிடித்த மிகச்சிறிய செயற்கைகோள்: நாசா ராக்கெட்டில் ஏவப்படுகிறது

தஞ்சை: தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் ரியாஸ்தீன்(18). சாஸ்த்ரா கல்லூரியில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் 2ம் ஆண்டு படித்து வரும் இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள் வரும் 2021 ஜூனில் அமெரிக்காவின் நாசா விண்வெளி  தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இது குறித்து மாணவர் ரியாஸ்தீன் கூறியதாவது: நாசா விண்வெளி மையம் மற்றும் ‘ஐ டூ லேனிங்’ அமைப்பு இணைந்து ‘க்யூப் இன்ஸ்பேஸ்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது.  இதில் 73 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 2019 - 2020க்கான போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன். இதில் நான் உருவாக்கிய விசன்-1 மற்றும் விசன் -2 இரண்டு செயற்கைக்கோள் தேர்வாகியுள்ளது.

இரு செயற்கைகோளும், 37 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது. இதற்கு, ‘பெமிடோ ‘ என, பெயரிடப்பட்டுள்ளது. பெமிடோ என்பது எடையில் சிறியது என பொருளாகும். இது டெக்னாலஜி எக்ஸ் பிரிமெண்ட்டல் செயற்கைகோள். இதற்கு தேவையான, மின் சக்தியை, செயற்கை கோளின் மேற்புறத்தில் உள்ள, சோலார் செல்களில் இருந்து பெற முடியும். இதில் 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையான தகவல்களை அறியலாம். இதில், விசன் -1 செயற்கை கோள் 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர். - 7 ராக்கெட் மூலம், ஏவப்படுகிறது. இதைப்போன்று விசன்-2 செயற்கோள் ஆர்.பி-6 என்கிற ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடப்படுகிறது.

Related Stories: