தொடர் மிரட்டல் எதிரொலி பெண் பஞ்சாயத்து தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் கிராம பஞ்சாயத்தின் தலைவராக பட்டியல் இனத்தை சேர்ந்த அமிர்தம் என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றது முதல் கிராம பஞ்சாயத்து செயலாளர் சசிக்குமார் உரிய மரியாதை கொடுக்கவில்லை, ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்காமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. இதேபோல் துணைத்தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ஹரிதாஸ் ஆகியோரும் மிரட்டல் விடுத்துள்ளனர். தன் மீதான கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் அமிர்தம் அளித்த புகாரில் ஹரிதாஸ், விஜயகுமார், சசிக்குமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில் தனக்கு மீண்டும் மிரட்டல்கள் வருவதாக கூறி அதற்கு பாதுகாப்பு வழங்க கோரி அமிர்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 1997ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த பல பஞ்சாயத்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ரவீந்திரன், இரண்டு வாரங்களில் விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: