சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் அஞ்சலி

சென்னை: சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கடலூர்,  வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி பேரலை தாக்கியது.

இந்த சுனாமி பேரலையால் தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதற்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டது. இந்த கொடிய நிகழ்வு நடந்து இன்றோடு  16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் 16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

கடலூர் துறைமுகத்தில் இன்று மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமியில் கடலூரில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து கன்னியாகுமரியில் உள்ள மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறைத்துயில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மரக்காணம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Related Stories: