ஜன.4ம் தேதி முதல் தேஜஸ் ரயில் ரத்து

சென்னை: மதுரை-சென்னைக்கு 6.30 மணி நேரத்தில் செல்லும் வகையில் பகல்நேர ‘தேஜஸ்’ சொகுசு ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் வார நாட்களில் வியாழக்கிழமை தவிர, மற்ற  அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும். அதைப்போன்று மறு மார்க்கமாக தினமும் காலை 6 மணிக்கு  சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும்.  உயர்தர ஏசி பெட்டியில் பயணிக்க சைவ, அசைவ உணவுகளுடன் தலா ஒருவருக்கு கட்டணம்  2295, உணவு இன்றி 1940. ஏசி பெட்டியில் உணவுடன்  தலா ஒருவருக்கு ₹1195. உணவின்றி பயணிக்க 895 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மற்ற ரயில்களை விட டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் இந்த ரயில்களுக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் தேஜஸ் ரயிலை ரத்து  செய்ய ரயில்வே முடிவு செய்தது. அதன்படி வரும் ஜனவரி 4ம் தேதி முதல் தேஜஸ் ரயில் (02613, 02614) ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Related Stories: