சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா பிற மாவட்ட பக்தர்களுக்கு தடையை எதிர்த்து வழக்கு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 28 ம் தேதி முதல் 31ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள்  கலந்து கொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுசம்பந்தமாக கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை  உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல்  நடைமுறைகளை பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிற மாவட்டங்களுக்கு பயணிக்க பின்பற்றப்பட்ட இ  பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பிற மாவட்டம் மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல்  உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில்  அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை வரும் 27 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: