துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்!: அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு கலையரசன் குழு நோட்டீஸ்..!!

சென்னை: துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு கலையரசன் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் புகாரினை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராகும் படி கலையரசன் குழு உத்தரவிட்டுள்ளது. கேட்கப்படும் ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழக தரப்பு தாமதப்படுத்துவதாக கருத்து நிலவுகின்ற சூழலில் வருகின்ற திங்கட்கிழமை விசாரணை குழு கேட்டுள்ள ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஊழல் புகார் தொடர்பாக ஏற்கனவே கலையரசன் குழு அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து ஆவணங்களை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை நேரில் அழைத்தும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து தற்போது விசாரணை நடத்துவதற்காகவே அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தேர்வு தொடர்பான ஆவணங்களை நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை ஆராய்வதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்தது. இந்த குழு கடந்த நவ.11ம் தேதி அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: