டெல்லி: இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில், வளர்ச்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது முன்னாள் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாக்க இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் சவூதி அரேபியா, துருக்கி, பல்வேறு ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டவை பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டன.