விவசாயிகளுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி, மத்திய அரசு அலுவலகம் முற்றுகை: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டத்தை இயற்றியுள்ள அரசு,  அச்சட்டங்களை ரத்து செய்யும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.

போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து கொச்சைப்படுத்தி வருகிறது. மத்திய பாஜ அரசின் இத்தகைய விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டங்களில் உள்ள விவசாய மற்றும் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், டிசம்பர் 26 முதல் ஜனவரி 5ம் தேதி வரை ‘விவசாயிகளின் விரோதி மோடி’ என்ற போராட்ட இயக்கத்தை நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானித்துள்ளது.

துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுங்கச் சாவடி முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்றவை வாயிலாக தமிழகம் முழுவதும் இந்த போராட்ட இயக்கம் மிக வீரியமாக நடைபெறும்.

Related Stories: