சென்னை: டாஸ்மாக் பார்களை, டிசம்பர் 1ம் தேதி திறக்க அனுமதி வழங்காவிட்டால் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவாதாக பார் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து டாஸ்மாக் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, டிசம்பர் 15ம் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, முற்றுகையிடுவதை கைவிட வேண்டும் என கூறப்பட்டது. நிர்வாகத்தின் உத்தரவாதத்தை அடுத்து முற்றுகை போராட்டத்தை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், நிர்வாகம் உத்திரவாதம் அளித்தபடி 15ம் தேதி டாஸ்மாக் பார்களை திறக்கவில்லை. இதனால், இன்று சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டை தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் கூறுகையில், ‘15ம் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. ஆனால், பார்களை திறப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரிவியவில்லை. எனவே, திட்டமிட்டபடி இன்று காலை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் ஒன்றினைந்து சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றார்.