மெரினா கடற்கரைக்கு தந்தையுடன் வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆயுதப்படை காவலருக்கு அடி,உதை

சென்னை: தந்தையுடன் மெரினா கடற்கரைக்கு வந்த இளம்பெண்ணிடம் ‘ஐஸ்கிரீம் வாங்கி தரேன் வர்றீயா’ என கூறி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். மெரினா கடற்கரையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் அனுமதிக்கபட்டுள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து மகிழ்ச்சியாக கடற்கரையை சுற்றி  பார்த்தனர். அதுபோல, இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்ரைக்கு வந்துள்ளார். அவர்கள் விவேகானந்தர் இல்லம், காமராஜர் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, மகள் பாப்கார்ன் கேட்டதால்  அதை வாங்க அவரின் தந்தை அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், தந்தைக்காக காத்திருந்த பெண்ணிடம்  ‘ஐஸ்கிரீம் வாங்கி தரேன் என்னுடன் வர்றீயா’ என்று கேட்டுள்ளார்.

இதனால் இளம் பெண் அச்சத்தில் உறைந்தார். இதை பயன்படுத்தி அந்த வாலிபர் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு கடற்கரை மணற்பரப்பிற்குள்  சென்றுவிட்டர். பாப்கார்ன் வாங்கி வந்த தந்தையிடம் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கூறி அழுதுள்ளார். அந்த நேரத்தில் அந்த வாலிபர் கடற்கரையில் இருந்து சாலை நோக்கி வந்தார். இதை பார்த்த இளம்பெண் இவன்தான் என்னிடம்  தவறாக நடக்க முயன்றான் என்று தன் தந்தையிடம் கூறினார். உடனே, அவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் இது குறித்து தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த போதையில் இருந்த வாலிபர் இளம்பெண்ணின் தந்தையை அடித்து உதைத்தார். இதை பார்த்த மெரினா கடற்கரைக்கு வந்த  பொதுமக்கள் போதை வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், அந்த வாலிபரை மெரினா காவல் நிலையத்தில் ஒப்பைடைத்தனர். அதன்படி போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாநகர காவல் துறையில்  ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் பாபு (32) என்றும், மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது. குடிபோதையில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  அதைதொடர்ந்து இளம் பெண் அளித்த புகாரின் படி போலீசார் ஆயுதப்படை காவலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: