நினைவிடமாக மாற்றப்பட உள்ள ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் திடீர் ஆய்வு: ஜனவரியில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க திட்டம்

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சென்னை கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று காலை திடீரென ஆய்வு நடத்தியது. அப்போது பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக ெபாதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. மேலும் அங்குள்ள அசையும், அசையா சொத்துக்களை பராமரிக்க அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. முதல்வரை தலைவராக கொண்ட அறக்கட்டளையும் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நினைவிடமாக மாற்றும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது.  இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக ஜெயலலிதா இல்லத்தை அளவிடும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜெயலலிதாவின் இல்லத்தை ஆய்வு செய்தனர். நேற்று காலை சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தாசில்தார் தாமோதரன், ஆர்டிஓ லட்சுமி மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது. அப்போது அவர்கள் கட்டிடம் உள்ள பகுதிகள், திறந்தவெளி இடங்கள் உள்ளிட்டவற்றை அளந்து பார்த்தனர்.

மேலும் அங்குள்ள அசையா சொத்துக்களை பராமரிப்பது, ஜெயலலிதா இல்லத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்று அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 மேலும் எந்தெந்த பகுதியில் எந்தெந்த அறைகளை அமைப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வைக்கு வைப்பது, ஜெயலலிதா இல்லத்தில் மார்பளவு வெண்கல சிலை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ெஜயலலிதா வாழ்ந்த இல்லத்தை ஜனவரி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: