எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு: நடிகர் கருணாஸ் ஆதரவாளர்கள் போதையில் பெண்ணிடம் பேசியதால் இரு தரப்பு மோதல்

* பாரில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்

* அஜய் வாண்டையார் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த சனிக்கிழமை நடிகர் கருணாஸ் ஆதரவாளரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளருமான அஜய் வாண்டையார் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். பாரில் மது குடித்து கொண்டிருந்த போது, நள்ளிரவு 1.30 மணிக்கு பாரில் நடனமாடி கொண்டிருந்த பெண்ணிடம் பேசியபோது தகராறு ஏற்பட்டது. அஜய் வாண்டையார் தரப்புக்கும் மண்ணடியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அஜய் வாண்டையார் தரப்பினர் பாரில் இருந்து விலை உயர்ந்த மது பாட்டில்கள் மற்றும் இருக்கைகளை தூக்கி வீசி உடைத்தனர். நட்சத்திர ஓட்டல் தரப்பும் மோதலில் ஈடுபட்ட நடிகர் கருணாஸ்  தரப்பினரும் எழும்பூர் காவல் நிலையத்தில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இதற்கிடையே பாரில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடந்த திங்கள் கிழமை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அதைதொடர்ந்து நட்சத்திர ஓட்டல் பார் மேலாளர் மணி நேற்று முன்தினம் எழும்பூர் காவல் நிலையத்தில் கருணாஸ் ஆதரவாளரான அஜய் வாண்டையார் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார்.

எழும்பூர் போலீசார் அஜய் வாண்டையார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், அஜய் வாண்டையார் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாரில் நடிகர் கருணாஸ் தனது ஆதரவாளர்களான அஜய் வாண்டையார், தாமோதரன் கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் உட்பட 6 பேருடன் மது அருந்தி கொண்ருந்தார். அப்போது தொழிலதிபர் பாண்டீஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் நடிகர் கருணாஸ் ஆதரவாளர்கள் தொழிலதிபரை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து தொழிலதிபர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார்முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார், தாமோதரன் கிருஷ்ணன், அவரது தம்பி கோகுல கிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டார். மீண்டும் அஜய் வாண்டையார் தரப்பினர் பாரில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: