சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எதிரொலி : நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு ;போயஸ் கார்டனில் மீண்டும் பரபரப்பு

சென்னை,சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எதிரொலியாக போயஸ் கார்டனில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வசித்து வருகிறார். இவர் அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியானதும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம் சிலர் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து நடிகர் ரஜினி காந்த் தரப்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேனாம்பேட்டை காவல் பகுதிக்கு உட்பட்ட போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் தலைமையில் 12 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே போயஸ் கார்டன் பகுதிக்கு வாகனங்களை அனுமதிக்கின்றனர். ரஜினி வீட்டிற்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ்கார்டனில் வசித்து வந்தார். அதனால் அந்த பகுதி போலீஸ் கெடுபிடியால் எப்போதும் பரபரப்பாக இருந்தது. அவர் மறைவுக்குப்பின் பரபரப்பு இல்லாமல் அமைதி நிலவியது. தற்போது மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Related Stories: