நாகை: நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் 3 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் ரயில்கள் செல்லும் நேரங்களில் கேட்டுகள் மூடப்படும் இதனால் நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வாகனங்கள் அனைத்தும் பல மணி நேரம் அப்பகுதியில் காத்திருக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்வதற்காக புத்தூர் ரவுண்டானா அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால் பாலம் விரிசல் ஏற்படும். இதனால் பாலம் திறக்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து பாலத்தின் பக்கவாட்டின் பகுதி சரி செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது.