சென்னை: சென்னை திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசின் இலவச வேஷ்டி சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் குவியல் குவியலாக கிடந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகம் மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களிலும், பொங்கல் பண்டிகைக்கும் வழங்கப்படும் இலவச பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், மழைகள் நினைந்து சேதமானதால் அவற்றை ஊழியர்கள் அலுவலகத்தின் பின்புறத்தில் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். தமிழக அரசின் இலவச வேஷ்டி சேலை, பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பொருட்கள், அரிசி உள்ளிட்டவை குவியல் குவியலாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர்.