போலீஸ் விசாரணை சரியில்லை நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: ஐகோர்ட்டில் நடிகர் சூரி மனுதாக்கல்

சென்னை:  நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘வீரதீர சூரன்’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்கான 40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.  அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து 2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக போலீசில் நடிகர் சூரி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்தநிலையில், தனது புகார் மீது போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி நடிகர் சூரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரி தரப்பில் ஆஜரான வக்கீல், ரமேஷ் குடவாலா சதிசெய்ததற்கான ஆடியோ பதிவு மற்றும் ஆதரங்களை தாங்கள் வைத்திருப்பதாக் கூறினார். இதை விசாரணை அதிகாரியிடம் மனுதாரர் ஒப்படைக்கலாம், அதன் மீது போலீசார் விசாரிக்க தயாராக உள்ளதாக அரசு வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சூரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை அடையார் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறி வழக்கை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Related Stories: