சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நிவர்’ புயல் தாக்கியது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலமும் பெரிய அளவு சேதத்தை சந்தித்தது. நிவர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட கடந்த 5ம் தேதி மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்தது.
இதையடுத்து மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களை கடந்த நேற்றும், நேற்று முன்தினமும் பார்வையிட்டது. இந்த ஆய்வு பணிகளை முடித்து விட்டு மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை திரும்பினர். இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள்.