திருச்செந்தூரில் இன்று எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடந்தே தீரும்: பாஜ தலைவர் முருகன் உறுதி

நாகர்கோவில்: எத்தனை தடைகள் வந்தாலும் திருச்செந்தூரில் இன்று வேல் யாத்திரை நிறைவு விழா நடந்தே தீரும் என்று பா.ஜ. தலைவர் முருகன் கூறியுள்ளார். குமரி பா.ஜ. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் தமிழக மேலிட பார்வையாளர் ரவி, மாநில தலைவர் முருகன் ஆகியோர் பங்கேற்று வருகிற சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து பேசினர். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டனர். நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் அனுமதிக்கவில்லை.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபின் மாநில தலைவர் முருகன் அளித்த ேபட்டி: வேல் யாத்திரை தமிழகம் முழுவதும்  எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவ.6ம் தேதி இந்த யாத்திரையை தொடங்கினோம். இதன் நிறைவு நிகழ்ச்சி, நாளை (இன்று) திருச்செந்தூரில் நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடந்தே தீரும். ரஜினிகாந்த் தேசப்பற்றாளர். சிறந்த ஆன்மிகவாதி. அவர் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறோம். அவர் கட்சி தொடங்கிய பின், தேசிய தலைமை ஆலோசனையின் படி எங்களது செயல்பாடு அமையும் என்றார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பாரதிய ஜனதா உள்ளதா? என கேட்டதற்கு, நேரடியாக பதில் அளிக்காமல், நடப்பவற்றை பொறுத்திருந்து பாருங்கள் என கூறி விட்டு சென்றார்.

Related Stories: