துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை அறியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கு

தர்மபுரி: தர்மபுரியில் உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்ததால்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது என்னிடத்தில் எந்த ஊழலும் இல்லை, நான் நியாயமானவன், அப்பழுக்கற்றவன் நான், விசாரணையை எதிர் கொள்வேன் என்று கூறிய சூரப்பா, மதுரையில் ஒருவரை வைத்து வழக்கு போட வைத்து, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். மதுரைக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை. அவர் வழக்கு போட வேண்டுமென்றால், சென்னையில் தான் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

இதில் இருந்தே தெரிகிறது. மடியில் கனமில்லை என்றால் வழியில் அவர் பயப்படத் தேவையில்லை. இந்த நிலையில், அரசு மீது ஏதேனும் புகார் கூற வேண்டும் என்பதற்காகவே கமல் பேசிக் கொண்டிருக்கிறார். சூரப்பா விவகாரத்தில் அவர் உண்மை நிலையை அறிந்து பேசவில்லை. நாளை (இன்று) முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் செய்முறை தேர்வுக்கு ஆய்வகம் தேவைப்படுவதால், அவர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்கும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலம் முடியாததால், இணைய தளம் மூலமே தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Related Stories: