800 கோடி விவகாரத்தில் திடீர் திருப்பம் துரைக்கண்ணுவிடம் அதிமுக தலைமை கொடுத்தது 2000 கோடி? பணத்தை மீட்க சிறப்பு குழுவினர் தீவிரம்

சென்னை: துரைக்கண்ணுவிடம் கட்சி தலைமை கொடுத்தது ₹800 கோடி அல்ல, 2000 கோடி என தெரியவந்துள்ளது. பணத்தை மீட்க 17 போலீசார் கொண்ட ஸ்பெஷல் டீம் குடந்தை, பாபநாசத்தில் முகாமிட்டு  ரகசிய விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வேளாண்மை துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு இறந்ததால் அவரிடம், மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி ₹800 கோடி  கொடுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து ரகசிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், சென்னையிலிருந்து 17 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மப்டியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையி–்ல் துரைக்கண்ணுவிடம் கட்சி தலைமை கொடுத்தது 800 கோடி அல்ல, தொகுதிக்கு 500 கோடி வீதம் 4 தொகுதிக்கு 2000 கோடி கொடுக்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது: தொகுதியை பலப்படுத்த ஒரு தொகுதிக்கு 200 கோடி கொடுத்ததாக கூறப்பட்டது உண்மையில்லை. ஒரு தொகுதிக்கு 500 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை துரைக்கண்ணுவிடம் கொடுத்த போதே கட்சி ரீதியானது என்பதால் அவரிடம் உரிய ஆவணத்தில் தலைமை கையெழுத்து பெற்ற பின்னரே கொடுத்ததாம். இந்நிலையில் துரைக்கண்ணு இறந்ததால் அவரது உடலை ஒப்படைக்க முடியாது. பணத்தை கொடுத்தால் தான் ஒப்படைக்க முடியும் என கட்சி தலைமை கறாராக கூறிவிட்டதாம். இதனால் ஐயப்பன் வேறுவழியின்றி, முதல்கட்டமாக 800 கோடியை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தான் உடலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மீதி பணத்தை வசூலிக்கவே கட்சி தலைமை சிறப்பு போலீஸ் குழுவை அனுப்பி உள்ளூர் போலீசார் உதவியை நாடாமல் விசாரித்து வருகின்றனராம்.

இந்நிலையில் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன் கபிஸ்தலம் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளாராம். துரைக்கண்ணு இருந்தபோதே ஐயப்பன் கபிஸ்தலத்தில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில் தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, பேசுவது என இருந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட, அவர் நிர்வாகிகளை அழைத்து அங்கு ரகசிய ஆலோசனை நடத்தினாராம். எதுபற்றி ஆலோசனை நடத்தினார்கள் என ஸ்பெஷல் டீம் ரகசியமாக விசாரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: