மெரினா கடற்கரையில் புதிதாக 900 தள்ளுவண்டிகள் மூன்று மாதங்களில் தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு: காலதாமதமானால் தொகையில் பிடித்தம் செய்ய மாநகராட்சிக்கு அனுமதி

சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு 3 மாதங்களில் 900 தள்ளுவண்டி கடைகளை தயாரிக்க  வழங்க வேண்டுமென்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், குறித்த காலத்தில் கடைகளை சப்ளை செய்ய தவறினால்  50 சதவீத தொகை வரை அபராதமாக பிடித்தம் செய்யவும்  மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பாக கோரப்பட்ட  டெண்டரை இரு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் உத்தரவு  பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின்படி காணொலி காட்சி மூலம் ஆஜரான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இரு நிறுவனங்களுக்கும் தள்ளுவண்டி கடைகளை அமைக்கும் பணிகளை வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.

 இதையடுத்து நீதிபதிகள், 900 தள்ளுவண்டி கடைகளை இரு நிறுவனங்களுக்கும் தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும், இது சம்பந்தமான உத்தரவை வரும் ஏழாம் தேதி மாநகராட்சி பிறப்பிக்க வேண்டும், மூன்று மாதங்களில் 900  கடைகளையும் இந்த இரு நிறுவனங்களும் உற்பத்தி செய்து வழங்க வேண்டும், கடைகள் உற்பத்தி செய்து வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க, தாமதமாகும் நாட்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதமானால்  கடையின் மதிப்பில் 10 சதவீத தொகையையும் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு மேல் தாமதமானால் 50 சதவீத தொகையையும் மாநகராட்சி பிடித்தம் செய்து கொள்ளலாம்.  கடைகள் அமைக்கும் பணிகளை மாதம்தோறும் நீதிமன்றம் ஆய்வு  செய்யும். மூன்று மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகள் தவிர வேறு எந்த கடைகளுக்கும் இடமளிக்கக் கூடாது. இந்த 900 கடைகளை குலுக்கல் மூலம் வினியோகிப்பது தொடர்பாக 4 வாரங்களில் சென்னை  மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: