ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணமின்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி

ஜோலார்பேட்டை :  ஏலகிரி மலையில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

இதனால் அவர்கள் பண தேவையின் போது எடுப்பதற்காக எஸ்பிஐ ஏடிஎம் மையம் உள்ளிட்ட 28 மையங்கள் உள்ளது. மேலும் இங்குள்ள மக்களும் தங்களின் தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம் மையத்தை நாடி வருகின்றனர். இந்நிலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த ஒரு வாரமாக சரிவர பணம் நிரப்பப்படாததால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள மையத்தில் பணம் எடுக்க முடியாததால் மீண்டும் 20 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னேரி பகுதிக்கு சென்று ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு மீண்டும் இங்கு வர வேண்டி உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் வங்கி அதிகாரிகள் அவ்வப்போது ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: