திருப்பதியில் காஞ்சி பீடாதிபதி சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஞ்சி பீடாதிபதி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று திருமலை  பழைய அன்னதான மண்டபம் அருகே வந்தார். அவரை  தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் இஸ்தி கப்பால் என்னும் மரியாதையுடன் வரவேற்றனர். முதலில், ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து, ஏழுமலையான்  கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:உலக நன்மைக்காக  ஏழுமலையான் கோயில் சார்பில் நாத நீரஞ்சன மேடையில் சுந்தரகாண்டம்,  விராட்டபர்வம், பகவத் கீதை, ரங்கநாதர் மண்டபத்தில் வேத பாராயணம், வசந்த மண்டபத்தில் விஷ்ணு பூஜைகள், திருப்பதி கபில தீர்த்தத்தில்  ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதில், பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்தது வரவேற்கத்தக்கது. அனைத்து மக்களும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நாடு  மற்றும் தனிநபரின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில், தலைமை செயல் அலுவலர் ஜவகர், கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: