10 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 10 நீதிபதிகளை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, அவர்கள் இன்று காலை பதவி ஏற்கின்றனர். தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 22 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியலை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதில், ‘மாவட்ட நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ் செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை பட்டியலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் இடம் பெற்றுள்ள 10  மாவட்ட நீதிபதிகளையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்ய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, புதிய நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு பதவி ஏற்கின்றனர். உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியானது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.

Related Stories: