சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 10 நீதிபதிகளை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, அவர்கள் இன்று காலை பதவி ஏற்கின்றனர். தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 22 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியலை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதில், ‘மாவட்ட நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ் செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றனர்.