வாகனத்தில் உள்ள வேகக்கட்டுப்பாடு அரசு கருவிகளை கண்காணிப்பதில்லை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கனரக, இலகு வாகனங்கள், வேன், லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது போக்குவரத்து துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க  எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை.

வாகனங்களில் ஒளிரும் பட்டை, இன்டிகேட்டர் விளக்கு எதையும் முறையாக பயன்படுத்துவதில்லை. அதுபோன்ற வாகனங்களில போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணித்தால் மட்டுமே தெரிய வரும். மிரர் வியூ கண்ணாடிகளை சரியான இடத்தில் பொருத்தாத ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் செயலாளர் பதில் அளித்தார். ஆனால் அரசினுடைய பதிலில் எந்த ஒரு திருப்தியும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதி ஒத்தி வைத்தனர். அப்போது போக்குவரத்து துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: