சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வலுவடைந்து புயலாக மாறும். இதன்மூலம் வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நேற்று முன்தினம் நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 491 இயந்திர படகுகளும், 35 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 172 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் மீன்பிடிக்க சென்றுள்ளன. தற்போது புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதால் அதிக காற்று காரணமாக தமிழக கரைக்கு திரும்புவதில் பிரச்னை இருக்கலாம்.