கனிம வள கொள்கை தொடர்பான வழக்கு: சிசிடிவி பொருத்த நிதியில்லை என்ற அரசின் விளக்கத்தை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கனிம வள கொள்கையை தடுக்க சிசிடிவி பொருத்த நிதியில்லை என்ற தமிழக அரசின்  விளக்கத்தை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும்  கிரானைட் முறைகேடுகள் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுப்பதற்காக குழு அமைத்து, இதுதொடர்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, கனிமவள கொள்ளையை தடுக்க மாநில, மாவட்ட  எல்லைகளில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த வேண்டும். அதேபோல் கனிமவளக் கொள்ளை தொடர்பாக,  அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தாக்கல்  செய்த அறிக்கையில், 4 மாவட்டங்களில் 151 சிசிடிவி பொருத்தப்பட்டுள்தாகவும், 27 மாவட்டங்களில்  பொருத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிசிடிவி  பொருத்த நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் கனிமவள  அறக்கட்டளை நிதியத்தில் பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி பொருத்த நிதியில்லை என்ற அரசின் விளக்கத்தை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள்,  மாவட்டங்களில் உள்ள வேறு நிதியையோ அல்லது உபரி நிதியையோ பயன்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: