நிவர் புயல் பாதிப்பால் நிறுத்தப்பட்ட பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடக்கம்

சென்னை: நிவர் புயலால் நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 10 ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் மூன்று நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. மேலும், ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, 23-ம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு தொடங்கியது. அதில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 15 மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்ததால் அவர்கள் பங்குபெறாமல் கலந்தாய்வு தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வில் 308 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், நிவர் புயல் காரணமாக 29-ஆம் தேதி வரை கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்தது. இந்நிலையில், தற்போது நிலைமை சீரானதால் இன்று முதல் மீண்டும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

Related Stories: