பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட குறைகளையும் முரண்பாடுகளையும் களைவதற்காக உச்சநீதிமன்றத்தால்  நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருவரும் சுமார் 15 ஆயிரம் ரூபாய்வரை ஊதியக் குறைப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

 கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், பொறியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15600 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி அந்த அடிப்படை ஊதியம் ரூ.9300 எனக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். மேலும் நில அளவைத்துறையில் பணியாற்றும் ஆய்வாளர், துணை ஆய்வாளர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இப்போது பணி நிலையின் தகுதி குறைக்கப்பட்டிருக்கிறது. ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்கத்தக்கதல்ல. இந்தக் குளறுபடிகளை அகற்றுவதற்கு நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.

புதிதாக ஒரு ஆணையத்தை அமைத்து  ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே இருந்த அடிப்படை ஊதியத்தைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: