திருமங்கலம் பகுதியில் மழை: கடை, வீடுகள் இடிந்து விழுந்தன

திருமங்கலம்: திருமங்கலம் நகரில் பெய்த மழைக்கு பெரியகடை வீதியில் உள்ள கடை இடிந்து விழுந்தது. மேலும் 11 வீடுகளும் இடிந்தன.

மதுரை திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 27ம் தேதி மாவட்டத்தில் அதிகளவாக திருமங்கலத்தில் 64.20 மி.மீட்டர் மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் இரவு 8மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையில் விடாது மழை பெய்தது. மழையளவு 23.60 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

இந்த மழையால் திருமங்கலம் பெரியகடைவீதியில் பழமையான கடை ஒன்று நேற்று முன்தினம் இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்த கடை கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை. கடை இடிந்து விழுந்ததால் கடையின் முன்பு நின்றிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. இதே போல் திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த முத்துமாரி, மச்சக்காளை, பொய்யாமலை, பாண்டி ஆகியோருக்கு சொந்தமான மண்வீடுகள் நான்கு இடிந்துவிழுந்துவிட்டன.

 இதே போல் தங்களாசேரி ரவி, ஏ.வலையபட்டி வீரம்மாள், கரடிக்கல்லை அடுத்த புங்கன்குளத்தை சேர்ந்த சுந்தர், குன்னணம்பட்டியை சேர்ந்த சாரதா, புளியகவுண்டன்பட்டியை சேர்ந்த அமராவதி, டி.புதுப்பட்டி பாண்டிசெல்வி, வடகரை அருந்ததியர் காலனியை சேர்ந்த அழகம்மாள் ஆகியோரின் வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தன. சேதமதிப்பீடுகளை வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்து வருகின்றனர். தொடர்மழை திருமங்கலம் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீரில் மிதக்கும் பஸ்ஸ்டாண்ட்

பேரையூரில் அள்ளப்படாத குப்பைகளாலும், தூர்வாராத சாக்கடைகளாலும் பஸ்நிலையத்திற்குள் சாக்கடை மற்றும் மழைநீர் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. பேரையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி சாலையில் மறவர்சாவடி வரை பாதாளச்சாக்கடை கழிவுகள் அள்ளப்படாமல் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்நிலையம் வழியாக செல்லக்கூடிய சாக்கடை கழிவுநீரில் மழைநீரும் சேர்ந்து பஸ்நிலையத்திற்குள் புகுந்தது. இதனால் பஸ்கள் அனைத்தும் இந்நீரில் நீந்திச் சென்றன. பஸ்நிலையத்தில் மராமத்து பணி செயத் ேபரூராட்சி நிர்வாகம் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே, மதுரை மண்டல பேருராட்சி இணைஇயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: