கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலகங்களின் நடைமுறையில் மாற்றம் வருகிறது: உயர் அலுவலர்கள் ஆய்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க ஐஜி சங்கர் உத்தரவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் உயர் அலுவலர்களின் திடீராய்வு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், புதிய மாற்றம் கொண்டு வர ஐஜி சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து கூடுதல் ஐஜி, அனைத்து மண்டல டிஐஜி, ஏஐஜிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், பதிவுத்துறையின் கீழ் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உயர் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் திடீராய்வு அறிக்கை கடந்த 2010ல் தயாரிக்கப்பட்டது. தற்போது, பதிவுத்துறையில் மேற்கொள்ளப்படும் பதிவுகள் மற்றும் கட்டணங்கள் அனைத்தும் இணைய வழி (ஸ்டார் 2.0) மூலம் நடக்கிறது. இதை உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்கின்றனர். ஏற்கனவே நடைமுறையில் இருந்த திடீராய்வு அறிக்கை தற்போது உள்ள நடைமுறைகளில் மாற்றப்படுகிறது. இனி வருங்காலங்களில் உயர் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் திடீராய்வுகள் அனைத்தும் படிவத்தில் பூர்த்தில் செய்யப்பட வேண்டும்.

அதில், மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், ஆய்வு செய்த நாள், ஆய்வு செய்த அலுவலர் பெயர், மற்றும் பதிவு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அடைந்த இலக்கு, முன் பணி நாளில் பதிவு செய்யப் பெற்ற ஆவணங்கள் வரை ஒளி வருடல் செய்யப்பட்டுள்ளனவா?, இல்லையெனில் ஒளி வருடல் செய்யப்படாத ஆவணங்கள் எண்ணிக்கை நிலுவைக்கான காரணம்?, முன்பணி நாளில் இணையதள வழி அனுமதிக்க பெற்ற வில்லங்க சான்று மற்றும் நகல் மனுக்கள் பெறப்பட்ட நாளில் இருந்து 3 தினங்களில் தீர்வு செய்யப்பட்டுள்ளதா, தாமதம் உள்ளதா?, ஆவண பதிவான நாளன்றே திரும்ப அளிக்கப்படுகிறதா? திரும்ப வழங்கப்படாமல் கையிருப்பில் உள்ள ஆவணங்களின் விவரம், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை, முடக்கம் செய்யப்பட்ட ஆவணங்கள் எண்ணிக்கை, சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான வசதிகள் இருக்கிறதா? உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அந்த படிவத்தில் இருக்கும். அந்த படிவத்தில் அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட வே்ணடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: