கும்பகோணம் : நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து விழுந்தது. அதேபோல் ஆடுதுறை- திருமாந்துறை இடையே உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்து கிடந்தது. இந்த மூங்கில் மரங்களை அகற்ற மின்வாரிய துறையினர் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கதிராமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சூரியனார்கோவில் கிராமத்தை சேர்ந்த கள உதவியாளர் உலகநாதன் (44) என்பவர் நேற்றுமுன்தினம் மின்கம்பத்தில் ஏறினார். உயரழுத்த மின் கம்பிகளில் 80 அடி தூரம் நடந்து சென்று மூங்கில் மரக்கிளைகளை வெட்டி அகற்றினார். மீண்டும் மின் கம்பிகளிலேயே நடந்து வந்து கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.