பவானி அருகே விபத்து தனியார் பஸ்கள் மோதல் பயணிகள் உயிர் தப்பினர்

பவானி: பவானி அருகே 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. ஈரோட்டிலிருந்து நேற்று காலை 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து பவானி வழியாக மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோன்று, சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பவானி நோக்கி சென்றது.

பவானி - மேட்டூர் ரோட்டில் சன்னியாசிபட்டி, ஆலமரம் அருகே சென்றபோது எதிரெதிரே கடந்த இரு பஸ்களும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன. இதனால், இரு பஸ்களும் நிலைதடுமாறி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி நின்றன. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரல் எழுப்பினர். இதில் பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பஸ் டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. ரோட்டோரங்களில் அருகருகே மரங்கள் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக இரு பஸ்களும் மோதாததால் பெரும் விபத்திலிருந்து பயணிகள் உயிர் தப்பினர்.

Related Stories: